
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான கேன் வில்லியம்சன் 5 ரன்னிலும், 3ம் வரிசையில் இறங்கிய ராகுல் திரிபாதி 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அபிஷேக் ஷர்மாவும் மார்க்ரமும் இணைந்து 96 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த அபிஷேக் ஷர்மா, 42 பந்தில் 65 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். சுழல் ஜாம்பவான் ரஷீத் கான் பவுலிங்கை சிக்ஸர்களாக விளாசினார் அபிஷேக்.
அபிஷேக்கை தொடர்ந்து மார்க்ரமும் அரைசதம் அடித்தார். மார்க்ரம் 56 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் ஷஷான்க் சிங் அதிரடியாக ஆடினார். ஃபெர்குசன் வீசிய கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசினார்.வெறும் 6 பந்தில் 25 ரன்களை விளாசினார் ஷஷான்க் சிங். 20 ஓவரில் 195 ரன்களை குவித்த சன்ரைசர்ஸ் அணி, 196 ரன்கள் என்ற கடின இலக்கை குஜராத் டைட்டன்ஸுக்கு நிர்ணயித்தது.