ஐபிஎல் 2022: மும்பையை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது ஹைதராபாத்!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

IPL 2022: Sunrisers Hyderabad defeat Mumbai Indians by 3 runs (Image Source: Google)
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பு இருப்பதால் பெரிய வெற்றி தேவை என்ற கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆடிவருகிறது.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மாவும் பிரியம் கர்க்கும் இறங்கினர். அபிஷேக் ஷர்மா 9 ரன்னில் ஆட்டமிழந்தார். பிரியம் கர்க்கும் திரிபாதியும் இணைந்து அடித்து ஆடினர். அதிரடியாக ஆடிய பிரியம் கர்க் 26 பந்தில்42 ரன்கள் அடித்து அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் திரிபாதியுடன் ஜோடி சேர்ந்த பூரனும் அடித்து ஆடினார். அதிரடியாக ஆடிய திரிபாதி அரைசதம் அடிக்க, பூரன் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். திரிபாதி 44 பந்தில் 76 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். திரிபாதியும் பூரனும் ஆடியபோது சன்ரைரர்ஸின் ஸ்கோர் 210+ ரன்கள் அடிக்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் அவர்கள் ஆட்டமிழந்த பின்னர், சன்ரைசர்ஸை 193 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது மும்பை அணி.
இதையடுத்து இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 48 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து இஷான் கிஷான் 43 ரன்களில் நடையைக் கட்டினார்.
அதன்பின் களமிறங்கிய டேனியல் சாம்ஸ், திலக் வர்மா ஆகியோர் உம்ரான் மாலிக்கின் வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து களமிறங்கிய டிம் டேவிட் விக்கெட் இழப்பையும் பொருட்படுத்தாமல் பவுண்டரி மழை பொழிந்தார்.
அதிலும் நடராஜன் வீசிய 18ஆவது ஓவரில் அடுத்தடுத்து நான்கு சிக்சர்களை பறக்கவிட்டு அரங்கத்தை அதிரவைத்தார். ஆனால் 46 ரன்கள் எடுத்திருந்த டிம் டேவிட் அதே ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் எடுக்க முயற்சித்து ரன் அவுட்டாகினார்.
ஆனாலும் கடைசி இரண்டு ஓவர்களில் மும்பை அணி வெற்றிபெற 19 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் 19ஆவது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் விக்கெட் வீழ்த்தியதுடன் அந்த ஓவரை மெய்டனாகவும் வீசி ஹைதராபாத் அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
அதன்பின் 20ஆவது ஓவரில் மும்பை வீரர்களால் அந்த இலக்கை எட்டமுடியவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்தது. ஹைதராபாத் அணி தரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News