ஐபிஎல் 2022: மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய கிங் கோலி; ஆர்சிபி அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

IPL 2022: Virat Kohli's Fifty helps RCB comfortable victory against Gujarat Titans (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் ஆர்சிபி அணி களமிறங்கியது. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஹசில்வுட் வீசிய 5ஆவது ஓவரில் வேட் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாச ஸ்கோர் மீண்டும் விறுவிறுவென உயரத் துவங்கியது. ஆனால் மேக்ஸ்வெல் வீசிய அடுத்த ஓவரில் 16 ரன்கள் சேர்த்த நிலையில் மேத்யூ வேட் எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா விக்கெட் வீழ்ச்சியின் நெருக்கடியை உணர்ந்து நிதானமாக விளையாடத் துவங்கினார். ஆனால் சஹாவும் 9வது ஓவரில் டு பிளசிஸால் ரன் அவுட் ஆக, குஜராத் அணி 64 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறத் துவங்கியது.
அடுத்து களமிறங்கிய மில்லர் ஹர்திக் உடன் கூட்டணி அமைந்து அணியை சரிவில் இருந்து மீட்கத் துவங்கினார். தொடந்து ஏதுவான பந்துகளை மட்டும் ஹர்திக் எல்லைக்கோட்டுக்கு விரட்டிக் கொண்டிருக்க, மேக்ஸ்வேல் வீசிய 14வது ஓவரில் தொடர்ந்து 2 சிக்ஸர்களை விளாசி அசத்தினார்.
ஷபாஷ் அகமது வீசிய ஓவரிலும் சிக்ஸர் மழை பொழிந்த மில்லர் ஹசரங்கா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். அடுத்து வந்த அதிரடி வீரர் ராகுல் திவேத்தியாவும் 2 ரன்களில் அவுட்டாக, ரஷீத் கானுடன் கூட்டணி சேர்ந்தார் ஹர்திக். சித்தார்த் கவுல் வீசிய 19வது ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசிய ஹர்திக் 42 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதே ஓவரில் ரஷீத் கானும் சிக்ஸர் விளாசி ஆர்சிபி அணியை கலங்கடித்தார்.
ஹசில்வுட் வீசிய கடைசி ஓவரில் ஹர்திக், ரஷீத் தலா ஒரு சிக்ஸர் விளாச, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது குஜராத் அணி. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 47 பந்துகளில் 62 ரன்களை குவித்தார்.
இதையடுத்து இலக்கை துரத்திய ஆர்சிபி அணிக்கு ஃபார்மில் இல்லாமல் தடுமாறி வந்த விராட் கோலி இன்றைய போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை குவித்தார். அவருடன் இணைந்து கேப்டன் டூ பிளெசிஸும் பவுண்டரிகளை விளாசினார்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அரைசதம் கடந்தும் அசத்தினார். ஆனால் மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த டூ பிளெசிஸ் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 73 ரன்களை எடுத்திருந்த விராட் கோலியும் ரஷித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஆனால் அடுத்த வந்த கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இதன்மூலம் 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியும் அசத்தியது.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News