ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் ஆர்சிபி அணி களமிறங்கியது. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அந்த அணியில் ஓப்பனர்களாக விருத்திமான் சஹா, சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். சித்தார்த் கவுல் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி ஸ்கோரை தித்திப்பாக துவக்கி வைத்தார் சஹா,அடுத்து அதே ஓவரில் ஒரு சிக்ஸரை விளாசி அசத்தினார் . சபாஷ் அகமது வீசிய 2ஆவது ஓவரிலும் சஹா பவுண்டரி விளாச, மறுபக்கம் சுப்மன் கில் வெறும் 1 ரன் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்துவீச்சில் அவுட்டாகி நடையை கட்டினார். அடுத்து வந்த மேத்யூ வேட் சஹாவுடன் கைகோர்த்து நிதான ஆட்டத்தை விளையாடத் துவங்கினார்.
ஹசில்வுட் வீசிய 5ஆவது ஓவரில் வேட் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாச ஸ்கோர் மீண்டும் விறுவிறுவென உயரத் துவங்கியது. ஆனால் மேக்ஸ்வெல் வீசிய அடுத்த ஓவரில் 16 ரன்கள் சேர்த்த நிலையில் மேத்யூ வேட் எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா விக்கெட் வீழ்ச்சியின் நெருக்கடியை உணர்ந்து நிதானமாக விளையாடத் துவங்கினார். ஆனால் சஹாவும் 9வது ஓவரில் டு பிளசிஸால் ரன் அவுட் ஆக, குஜராத் அணி 64 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறத் துவங்கியது.