
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 15ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூருவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய விராட் கோலி பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளினார். இவரது அதிரடியின் மூலம் ஆர்சிபி அணி முதல் 6 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 56 ரன்களைச் சேர்த்தது.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 61 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் அமித் மிஸ்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.