
ஐபிஎல் தொடரில் அதிகம் விமர்சிக்கப்பட்ட நிர்வாகமாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் இருக்கிறது. கேப்டன்களின் செயல்பாடுகளில் தலையிடுவது, முக்கிய வீரர்களுக்கு போதிய மரியாதை தராமல் இருப்பது போன்ற குற்றச்சாட்டு அந்த அணி நிர்வாகம் மீது இருக்கிறது. சன் ரைசர்ஸுக்கு சாம்பியன் பட்டம் வென்றுகொடுத்த டேவிட் வார்னர், ரஷித் கான் ஆகியோரை அதிரடியாக அணியில் இருந்து நீக்கினார்கள்.
இந்த சீசனில் உம்ரான் மாலிக் மீது கை வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆம், கடந்த சீசனில் மிரட்டலாக செயல்பட்ட உம்ரான் மாலிக், தற்போது வெறும் 7 போட்டிகளில் மட்டும்தான் களமிறக்கப்பட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு காயம் ஏற்பட்டதா, எதற்கு நீக்கப்பட்டார் என்பதே, கேப்டனுக்கு தெரியவில்லை என்பதுதான் மிகப்பெரிய நகைச்சுவையாக இருக்கிறது.
ஆர்சிபிக்கு எதிரான போட்டியின்போது, இம்பாக்ட் வீரராக மட்டும் உம்ரான் மாலிக்கை சேர்த்தது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த மார்க்கரம், “உம்ரான் மாலிக் ஒரு திறமையான வீரர். ஆனால், தற்போது அவர் ஏன் விளையாடவில்லை என்று எனக்கே தெரியாது. திரைமறைவில் என்ன நடக்கிறது என்று சத்தியமாக என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை” என தெரிவித்தார்.