
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணி பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெறும் 44ஆவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டேவிட் வர்னர் - பிலீப் சால்ட் இணை களமிறங்க, குஜராத் தரப்பில் முகமது ஷமி பந்துவீசினார். இதில் முதல் பந்தை எதிர்கொண்ட பிலிப் சால்ட் அதனை பவுண்டரி அடிக்க முயற்சிக்க அது நேராக டேவிட் மில்லரிடம் கேட்ச்சாக சென்றது.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய பிரியம் கார்க் தனது பங்கிற்கு டேவிட் வார்னரை ரன் அவுட் செய்து பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து வந்த ரைலீ ரூஸொவ் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசி அதிரடி காட்டினாலும், முகமது ஷமியின் இரண்டாவது ஓவரிலேயே தனது விக்கெட்டை இழந்தார்.