
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இன்னும் ஓரிரு தினங்களில் நிறைவடையவுள்ளன. ஆனாலும் இந்தாண்டு ஐபிஎல் சீசனில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று இருப்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய 3 இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.
அந்தவகையில் இன்று நடைபெற்று வரும் 65ஆவது லீக் ஆட்டத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது. இப்போட்டியில் ஆர்சிபி அணி வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா - ராகுல் திரிபாதி இணை களமிறங்கினர். இதில் அபிஷேக் சர்மா 11 ரன்களிலும், ராகுல் திரிபாதி 15 ரன்களிலும் என மைக்கேல் பிரேஸ்வெல்லின் ஒரே ஓவரில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.