
ஐபிஎல் டி20 தொடரில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 16ஆவது சீசன் வரும் 31ஆம் தேதி தொடங்குகிறது. இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றிராத அணிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்கி ஏமாற்றத்துடன் தொடரைவிட்டு வெளியேறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது.
இந்த சீசனிலாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி, ஷிகர் தவான் கேப்டன்சியில் உள்நாட்டு மற்றும் இங்கிலாந்து வீரர்களை கொண்ட வலுவான அணியை கட்டமைத்தது. டி20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி வெல்ல காரணமாக இருந்து தொடர் நாயகன் விருதை வென்ற சாம் கரனை உச்சபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுத்தது.
மேலும் இங்கிலாந்து அதிரடி வீரர்கள் லியாம் லிவிங்ஸ்டோன்(ரூ.11.50 கோடி) மற்றும் ஜானி பேர்ஸ்டோ(ரூ.6.75 கோடி) ஆகியோரையும் அணியில் எடுத்திருந்தது. ஷிகர் தவானுடன் இங்கிலாந்து அதிரடி வீரரான ஜானி பேர்ஸ்டோவை ஓபனிங்கில் இறக்கி அதிரடியான தொடக்கத்தை பெற்று, அதன்பின்னர் லிவிங்ஸ்டோன், ராஜபக்சா, ஷாருக்கான் என அதிரடியான பேட்டிங் ஆர்டரை கட்டமைத்த மகிழ்ச்சியில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, இடியாய் இறங்கியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முடிவு.