
ஐபிஎல் தொடர் 16ஆவது சீசன் ரசிகர்கள் பெரும் வரவேற்பை பெற்று தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற 23 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூர் அணியை எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. பரபரப்பான இந்த போட்டியில் சென்னை அணியின் அபார பேட்டிங் மற்றும் எம்எஸ் தோனியின் திறமையான கேப்டன்ஷிப் காரணமாக வெற்றி பெற்றது.
நாளை மறுநாள் நடைபெற இருக்கும் போட்டியில் சிஎஸ்கே அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டிய முனைப்பில் சென்னை அணி செயல்படும் என்பது பெங்களூரு அணியுடன் ஆன அவர்களது ஆட்டத்தின் அணுகுமுறையின்போதே தெரிந்தது.
இந்தத் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே எம் எஸ் தோனி இந்தத் தொடரோடு ஓய்வு பெற்று விடுவார் என்ற ஒரு கருத்து மற்றும் கணிப்பு பரவலாக நிலவி வருகிறது. இது தொடர்பாக கிரிக்கெட் விமர்சகர்கள் முதல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வரை அதே கருத்தை தான் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.