
ஐபிஎல் தொடரின் "எல் கிளாசிக்கோ" என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் மும்பை - சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை வான்கடே மைதானத்தில் நடக்கவிள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சொந்த மண்ணில் நடக்கும் போட்டி என்பதால், மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தீவிர பேட்டிங் பயிற்சி செய்து வருகிறார். ஏனென்றால் ஐபிஎல் தொடரில் 5 ஆண்டுகளாக ரோஹித் சர்மா ஃபார்மில் இல்லை.
கடந்த 2018ஆம் ஆண்டு ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி 23.8 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 133ஆகவும் இருந்தது. இதன்பின்னர் 2019ஆம் ஆண்டு பேட்டிங் சராசரி 28.9 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 128.54 ஆகவும் இருந்தது. அதேபோல் 2020ஆம் ஆண்டு ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி 27.6 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 127.7 ஆகவும் குறைந்தது. 2021ஆம் ஆண்டு பேட்டிங் சராசரி 29.3 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 127.4ஆகவும் இருந்துள்ளது.
கடந்த ஆண்டில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி 19.1 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 120.1 ஆக மட்டுமே இருந்துள்ளது. இதனால் கேப்டனாக இல்லையென்றால் ரோஹித் சர்மா மும்பை அணியிலேயே நீடித்திருக்க மாட்டார் என்றும், கேப்டன்சியில் இருப்பதால் மட்டுமே அவர் மும்பை அணிக்காக விளையாடி வருவதாகவும் ரசிகர்களிடையே விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் தனது பேட்டிங் ஃபார்மை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு ரோஹித் சர்மா தள்ளப்பட்டுள்ளார்.