ஐபிஎல் 2023: ஷுப்மன் கில்லை கடுமையாக விமர்சித்த விரேந்திர சேவாக்!
அணியின் நலனை மறந்து சொந்த சாதனைகளுக்காக விளையாடினால் கிரிக்கெட் ஒருநாள் உங்களுடைய கன்னத்தில் அறைந்து விடும் ஷுப்மன் கில்லை என்று முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் பஞ்சாப்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த குஜராத் 3ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது. மொஹாலியில் நடைபெற்ற ஒப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவரில் போராடி 153/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேத்தியூ சார்ட் 36 (24) ரன்கள் எடுக்க குஜராத் சார்பில் அதிகபட்சமாக மோகித் சர்மா 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 154 ரன்கள் துரத்திய குஜராத்துக்கு சுப்மன் கில்லுடன் இணைந்து 48 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த விருத்திமான் சஹா 5 பவுண்டரியுடன் அதிரடியாக 30 (19) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சாய் சுதர்சன் 2ஆவது விக்கெட்டுக்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் கடைசி வரை அதிரடியாக விளையாடாமல் 19 ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்த சில ஓவர்களில் கேப்டன் பாண்டியாவும் 8 (11) ரன்களில் நடையை கட்டினார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக செயல்பட்ட சுப்மன் கில் அரை சதமடித்து 7 பவுண்டரி 1 சிக்சருடன் 67 ரன்கள் குவித்து சாம் கரண் வீசிய கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டாலும் பதறாமல் செயல்பட்ட ராகுல் திவாட்டியா பவுண்டரியுடன் 5* (2) ரன்களும் டேவிட் மில்லர் 17* (18) ரன்களும் எடுத்து 19.5 ஓவரில் குஜராத்தை வெற்றி பெற வைத்தனர்.
Trending
முன்னதாக இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் ஆரம்பம் முதலே மெதுவாக விளையாடியது எதிர்புறம் இருந்த பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை கொடுத்தது. குறிப்பாக சமீப காலங்களில் அடுத்தடுத்த சதங்களை அடித்து உச்சகட்ட பார்மில் இருந்தும் இப்போட்டியில் 10 ஓவர்கள் வரை பேட்டிங் செய்து நன்கு செட்டிலாகியும் மெதுவாக விளையாடிய அவர் 40 பந்துகளில் 50 ரன்களை தொட்ட பின்பு தான் அதிரடியாக விளையாட முயற்சித்தார். ஒருவேளை சற்று முன்னதாகவே அவர் வேகமாக செயல்பட்டிருந்தால் கடைசி ஓவர் வரை போராடாமல் குஜராத் முன்கூட்டியே வென்றிருக்கும்.
சொல்லப்போனால் கேப்டன் ஹர்டிக் பாண்டியாவும் இவ்வாறு கடைசி ஓவர் வரை போட்டி செல்வதை தாம் விரும்பவில்லை என்று போட்டியின் முடிவில் மறைமுகமாக விமர்சித்தார். இந்நிலையில் 17 ஓவரிலேயே முடிய வேண்டிய இப்போட்டி சுப்மன் கில் மெதுவாக விளையாடியதால் கடைசி ஓவர் வரை சென்றதாக முன்னாள் வீரர் சேவாக் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக அணியின் வெற்றிக்காக விளையாடாமல் அரை சதமடித்த பின்பு தான் அவர் அதிரடியை துவக்க முயற்சித்ததாக சேவாக் விமர்சித்துள்ளார். இப்படி அணியின் நலனை மறந்து சொந்த சாதனைகளுக்காக விளையாடினால் கிரிக்கெட் ஒருநாள் உங்களுடைய கன்னத்தில் அறைந்து விடும் என்று முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Virender Sehwag Slams Shubman Gill over his batting approach against Punjab Kings!#IPL2023 #PBKSvGT #VirenderSehwag #ShubmanGill pic.twitter.com/Fq41Gl1Ero
— CRICKETNMORE (@cricketnmore) April 14, 2023
இதுகுறித்து பேசிய அவர், “அவர் 49 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். ஆனால் எப்போது அரை சதத்தை தொட்டார்? அவர் 41 – 42 பந்துகளில் இருக்கும் போது தான் தன்னுடைய அரை சட்டத்தை தொட்டார். அதன் பின்பு தான் அடுத்த 7 – 8 பந்துகளில் அடுத்த 17 ரன்களை அடித்தார். அதாவது அரை சதமடித்த பின்பு தான் அவர் அதிரடியாக விளையாட முயற்சித்தார். ஒருவேளை அந்த அதிரடியை அவர் முன்னதாகவே முயற்சித்திருந்தால் குஜராத் கடைசி ஓவருக்கு பதிலாக 17வது ஓவரிலேயே வென்றிருக்கும்.
பொதுவாக முதலில் நான் அரை சதமடிக்கிறேன் பின்னர் அணியை வெற்றி பெற வைக்கிறேன் என்ற எண்ணத்துடன் நீங்கள் விளையாட கூடாது. நீங்கள் உங்களுடைய சொந்த சாதனைகளை நினைக்கும் போது ஒருநாள் அதற்காக கிரிக்கெட் உங்களுடைய கன்னத்தில் கடுமையாக அறையும். நீங்கள் எப்போதும் இவ்வாறு நினைக்க கூடாது. ஒருவேளை நீங்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியிருந்தால் முன்கூட்டியே அரை சதத்தையும் அடித்து உங்களது சாதனையையும் முன்கூட்டியே தொட்டு அணிக்காக நிறைய பந்துகளை மீதம் கொடுத்திருக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now