
இந்தாண்டு ஜூன் மாதம் ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவின் இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடர் 20 அணிகளைக் கொண்ட நடத்தப்படவுள்ளது. அதன்படி இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டதுடன், போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயராகி வருகின்றன.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி இம்மாத இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரைப் பொறுத்த இந்திய அணியின் வீரர்கள் தேர்வு இருக்கும் என்பதால் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட ஆர்வம் காட்டிவருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணி தேர்வாளர்கள் பெரும்பாலான ஐபிஎல் போட்டிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.
இதனால் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யார் யார் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்திய அணியின் பெரும்பாலான இடங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், விக்கெட் கீப்பருக்கான போட்டி மட்டும் தொடர்ந்து வருகிறது. இதில் சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மற்றும் இஷான் கிஷான் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.