
ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் இந்தியாவின் இளம் வீரர்கள் நட்சத்திர வீரர்களாக உருவெடுத்து வருகிறார்கள். இதில் ரவிச்சந்திரன் அஸ்வின், சூர்யாகுமார் யாதவ், ரிங்கு சிங், நடராஜன், உம்ரான் மாலிக், இஷான் கிஷான் போன்ற வீரர்கள் மிக முக்கியமானவர்களாக பார்க்கப்படுகின்றனர். ஏனெனில் இவர்கள் ஐபிஎல் தொடரின் மூலம் இந்திய அணிக்குள் இடம்பிடித்ததுடன், சர்வதேச கிரிக்கெட்டிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி நட்சத்திர வீரர்களாக உருவெடுத்துள்ளனர்.
அந்தவரிசையில் தற்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இளம் வேகப்பந்த் வீச்சாளர் மயங்க் யாதவும் தனது பெயரை பதிவுசெய்துள்ளார். மணிக்கு சுமார் 150 கிமீ வேகத்தில் சராசரியாக பந்துவீசிவரும் அவர், பஞ்சாப் அணிக்கு எதிரான தனது அறிமுக போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியிலும் தனது வேகத்தால் மிரட்டி வரும் மயங்க் யாதவ் அந்த அணியின் அதிரடி வீரர்களான கிளென் மேக்ஸ்வெல் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டியுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் யாதெனில் இவரது பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த இருவரும் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தி வருபவர்கள் என்பது தான்.