
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது வருவதுடன், புது புது சர்ச்சைகளையும் எதிர்கொண்டுவருகிறது. அதில் மிக முக்கியமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்த விவாதமானது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. போதாக்குறைக்கு அவர் டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளதால் அவர், மீது முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள் என அனைவரும் முழு கவனத்தை செலுத்தி வருகின்றனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 500 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்கள் அடங்கும். ஆனாலும்அவரது ஸ்டிரைக் ரேட் குறித்து விமர்சனங்கள் எழுந்த வண்ணமே உள்ளது. ஏனெனில் தொடக்க வீரராக களமிறங்கும் விராட் கோலி 147-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறார். ஆனால், தொடக்க வீரர்களாக களமிறங்கும் வெளிநாட்டு வீரர்களை ஒப்பிடுகையில் விராட் கோலி குறைந்த ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி வருவதாக முன்னாள் வீரர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதையடுத்து வீரட் கோலி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “நான் எனது ஸ்டிரைக் ரேட் பற்றி கவலைப்படவில்லை. ஏனென்றால் பலரும் எனது ஸ்டிரைக் ரேட் மற்றும் ஸ்பின்னர்களுக்கு எதிரான எனது ஆட்டம் குறித்து அதிகமாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை அணிக்காக வெற்றிபெற்று கொடுப்பதே முக்கியம். அதை தான் கடந்த 15 ஆண்டுகளாக செய்துகொண்டிருக்கிறேன். தங்கள் சொந்தக் கருத்துகளை வெளியே உட்கார்ந்து யார் வேண்டுமானாலும் பேசலாம்” என தனது ஸ்டிரைக் ரேட் குறித்து விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.