
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 38ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் அதிரடியாக விளையாட முயற்சித்த ரோஹித் சர்மா 6 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்த ஓவரிலேயே இஷான் கிஷானும் ரன்கள் ஏதுமின்றி நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அணியை சரிவிலிந்து மீட்டெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 ரன்கள் மட்டுமே எடுத்த தனது விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் மும்பை அணி 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த முகமது நபி மற்றும் திலக் வர்மா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
இப்போட்டியில் சிரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது நபி 2 பவுண்ட்ரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இதனைத்தொடர்ந்து திலக் வர்மாவுடன் இணைந்த நேஹல் வதேரா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோர் 150 ரன்களை கடந்ததுடன், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 99 ரன்களை எட்டியது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.