
இந்திய அண்டர் 19 அணியானது எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு 50 ஓவர் பயிற்சி ஆட்டம், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இரண்டு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இதில் இங்கிலாந்து யு19 மற்றும் இந்தியா யு19 அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டி ஜூன் 24ஆம் தேதியும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஜூன் 27ஆம் தேதி தொடங்கி ஜூலை 7ஆம் தேதி வரையிலும், இரண்டுநாள் போட்டிகள் ஜூலை 12ஆம் தேதி தொடங்கி ஜூலை 23ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இதையடுத்து இத்தொடருக்கான இந்திய அண்டர்19 அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
அதன்படி ஆயூஷ் மாத்ரே தலைமையிலான இந்த இந்திய அணியில் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் வைபவ் சூர்யவன்ஷிக்கு இடம் கிடைத்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 7 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் என 247 ரன்களைச் சேர்த்து சிறப்பான ஃபார்மில் உள்ளார். மேலும் அவர் 35 பந்துகளில் சதமடித்தும் அசத்தியுள்ளார்.