சரியான நேரத்தில் அனைவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்த மைதானத்தில் எங்களின் வெற்றி சதவீதம் பற்றி எனக்குத் தெரியாததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தர்மசாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் பிரப்ஷிம்ரன் சிங் 91 ரன்களையும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய ஷஷாங்க் சிங் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 33 ரன்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களைச் சேர்த்தது.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், இறுதிவரை போராடிய ஆயூஷ் பதோனி 74 ரன்களையும், அப்துல் சமத் 45 ரன்களையும் சேர்த்த நிலையிலும், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், “நேர்மையாகச் சொன்னால் இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. சரியான நேரத்தில் அனைவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ஒவ்வொருவரிடமிருந்தும் கிடைத்த பங்களிப்பு மகத்தானது. பிரப்ஷிம்ரன் சிங் இன்று அவர் விளையாடிய விதம் விதிவிலக்கானது. அவர் விளையாடிய அனைத்து ஷாட்களும் கண்களுக்கு விதிவிலக்காக இருந்தன. இந்த மைதானத்தில் எங்களின் வெற்றி சதவீதம் பற்றி எனக்குத் தெரியாததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
போட்டியில் வெற்றி பெற நான் மைதானத்தில் அடியெடுத்து வைக்கிறேன், அதுதான் என் மனநிலை. நாம் சரிசெய்ய வேண்டிய ஒரே விஷயம் என்னவென்றால் - அதுதான் விழிப்புணர்வு மற்றும் களத்தில் நாம் நகரும் விதம். உங்களை நீங்களே ஆதரித்து, உங்கள் உள்ளுணர்வை ஆதரித்து, புள்ளிவிவரங்கள் மற்றும் அது என்ன வழங்க முடியும் என்பதைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டாம். முடிவுகள் முக்கியம், அதுதான் வெற்றி” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது வெற்றிபெற்றதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 15 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியளின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியதுடன், பிளே ஆஃப் வாய்ப்பையும் ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது. அதேசமயம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் 6ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now