இந்த ஐபிஎல் தொடர் இஷான் கிஷனுக்கு இது மிகப்பெரும் வாய்ப்பாக அமையும் -ஆகாஷ் சோப்ரா!
எதிர்வரும் ஐபிஎல் தொடரின் மூலம் இஷான் கிஷன் மீண்டும் தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்க மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற ஆரவரம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் இளம் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடவுள்ளார். முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த இஷான் கிஷான் ஏலத்திற்கு முன்னதாக அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் வீரர்கள் மேகா ஏலத்தில் அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.11.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது
Trending
இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இஷான் கிஷான் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. ஏனெனில் கடந்தாண்டு ஐபிஎல் தொடருக்கு முன் இந்தியா அணியின் அங்கமாக இருந்த இஷான் கிஷான், உள்ளூர் போட்டிகளை தவிர்த்து ஐபிஎல் தொடருக்காக தயாரானதன் காரணமாக, அணியின் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் இந்திய அணியில் தான் இழந்த இடத்தைப் பிடிக்கும் முயற்சியில் அவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரின் மூலம் இஷான் கிஷான் மீண்டும் தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்க மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் காணொளியில் பேசிய ஆகாஷ் சோப்ரா, “என்ன காரணத்தாலோ, அவர் ரசிகர்களின் பார்வையில் இருந்து முற்றிலும் மறைந்துவிட்டார் என்பது எனக்கு தெரியவில்லை.
ஏனெனில் யாரும் அவரைப் பற்றிப் பேசவில்லை அல்லது அவரது முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. அவர் ரஞ்சி கோப்பை தொடரில் கூட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அங்கும் ரன்களையும் சேர்த்தார். மேலும் அவர் தனது அணிக்காக முடிந்த அனைத்தையும் சிறப்பாக செய்து வருகிறார். இருப்பினும் கூட அவரைப் பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
ஐபிஎல் தொடரில் இஷான் கிஷனின் ஃபார்ம் சிறப்பாக இருந்துள்ளது. அவர் இதுவரை 105 போட்டிகளில், 135.87 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 16 அரை சதங்கள் உள்பட 2,644 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அவர் தொடக்க வீரராகவே அதிக ரன்களைச் சேர்த்துள்ளார். இருப்பினும் சன்ரைசர்ஸ் அணியில் ஏற்கெனவே டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா தொடக்க வீரர்கள் இடத்தில் இருப்பதால், இஷான் கிஷான் மிடில் ஆர்டர் வீரராகவே களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now