ஐபிஎல் 2025: பரபரப்பான ஆட்டத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கௌகாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பவுண்டரியுடன் இன்னிங்ஸைத் தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மேற்கொண்டு ரன்கள் எதையும் சேர்க்காமல் 4 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் சஞ்சு சாம்சனுடன் இணைந்த நிதீஷ் ரானா ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
Trending
இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசிய நிதீஷ் ரானா 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், சஞ்சு சாம்சன் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த நிதீஷ் ரானாவும் 10 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 81 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் துருவ் ஜூரெல், வநிந்து ஹசரங்கா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ரியான் பராக் மற்றும் ஷிம்ரான் ஹெட்மையர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரியான் பராக் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 37 ரன்களிலும், அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த ஹெட்மையர் 19 ரன்களிலும் என ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களும் ரன்களைச் சேர்க்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைச் சேர்த்தது. சிஎஸ்கே தரப்பில் கலீல் அஹ்மத், நூர் அஹ்மத், மதீஷா பதிரானா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரச்சின் ரவீந்திரா - ராகுல் திரிபாதி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரச்சின் ரவீந்திரா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் ராகுல் திரிபாதியுடன் இணைந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். இதில் இருவரும் இணைந்து 46 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ராகுல் திரிபாதி 23 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷிவம் தூபேவும் 18 ரன்களுடனு நடையைக் கட்டினார்.
மேற்கொண்டு விஜய் சங்கரும் 9 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். அவருடன் இணைந்து ரவீந்திர ஜடேஜாவும் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். பின்னர் அதிரடியாக விளையாடும் முயற்சியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 63 ரன்களை எடுத்த கையோடு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மகேந்திர சிங் தோனி அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல முயற்சித்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் சிஎஸ்கே அணிக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் பந்தை எதிர்கொண்ட தோனி 16 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை மட்டுமே சேர்த்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் வநிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய முதல் வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now