ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 1: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான குவாலிஃபயர் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிவுள்ளது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் இணை வழக்கம் போல் அதிரடியாக தொடங்கினர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரியன்ஷ் ஆர்யா 7 ரன்களில் விக்கெட்டாஇ இழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த பிரப்ஷிம்ரன் சிங்கும் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்களில் நடையைக் கட்டி அதிர்ச்சி கொடுத்தார்.
அதன்பின் ஆர்சிபி அணி தரப்பில் பந்துவீச வந்த ஜோஷ் ஜேசில்வுட், சுயாஷ் சர்மா இருவரும் பஞ்சாப் கிங்ஸின் பேட்டிங்கை மொத்தாமாக சுருட்டினர். அதன்படி அணியின் அதிரடி வீரர்கள் ஜோஷ் இங்கிலிஸ் 4 ரன்களுக்கும், ஸ்ரேயாஸ் ஐயர் 2 ரன்களுக்கும் என ஹேசில்வுட் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஒருமுனையில் அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சி செய்த நிலையில், மறுபக்கம் நெஹால் வதேரா, ஷஷாங்க் சிங், இம்பேக்ட் வீரர் முஷீர் கான் உள்ளிட்டோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
மேற்கொண்டு 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 26 ரன்களில் மார்கஸ் ஸ்டொய்னிஸும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 18 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆர்சிபி அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் சுயாஷ் சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், யாஷ் தயாள் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் பில் சால்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 12 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மயங்க் அகர்வாலும் தனது பங்கிற்கு 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 19 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த பில் சால்ட் 23 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Also Read: LIVE Cricket Score
மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பில் சால்ட் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 56 ரன்களைச் சேர்த்த நிலையில், அவருட்ன் இணைந்து விளையாடிய கேப்டன் ரஜத் படிதாரும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 15 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், முதல் அணியாக இறுதிப்போட்டிக்கும் முன்னேறி சாதித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now