ஐபிஎல் 2025: கோலி, குர்னால் அரைசதம்; கேப்பிட்டல்ஸை பழி தீர்த்தது ராயல் சேலஞ்சர்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 46ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ரஜத் பட்டிதார் தலைமையிலான ரயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தின.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான ஆர்சிபி அணியில் பில் சால்டிற்கு பதிலாக ஜேக்கப் பெத்தெல் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். மறுபக்கம் டெல்லி அணியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் மீண்டும் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் அபிஷேக் போரால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அபிஷேக் போரால் அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான தொடக்கத்தைக் கொடுத்தார்.
அதன்பின் தொடர்ந்த அதிரடியாக விளையாடி வந்த அபிஷேக் போரால் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 28 ரன்களைச் சேர்த்த கையோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய கருண் நாரும் 4 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஃபாஃப் டூ பிளெசிஸும் 22 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் அக்ஸர் படேல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். ஆனால் இதில் அக்ஸர் படேல் 15 ரன்களை மட்டுமே எடுத்திருந்த கையோடு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
மேற்கொண்டு அரைசதம் நேக்கி விளையாடி வந்த கேஎல் ராகுலும் 41 ரன்னில் விக்கெட்டை இழக்க, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ஆஷுதோஷ் சர்மாவும் 2 ரன்களுடன் நடையைக் கட்டினார். இருப்பினும் அதன்பின் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டம் அதிரடியாக விளையாடியதுடன் 18 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 34 ரன்களையும், விப்ராஜ் நிகம் ஒரு சிக்ஸருடன் 12 ரன்களையும் சேர்த்து கடைசி ஓவரில் விக்கெட்டை இழந்தனர். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களைச் சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி - ஜேக்கப் பெத்தெல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ஜேக்கப் பெத்தல் அடுத்தடுத்த பந்துகளில் சிக்ஸரையும், பவுண்டரியையும் விளாசிய நிலையில் 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து நடப்பு தொடரில் சிறப்பான ஃபார்மில் இருந்த தேவ்தத் படிக்கல் இப்போட்டில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரஜத் படிதாரும் 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகி ஆர்சிபி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இதனால் ஆர்சிபி அணி 26 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் குர்னால் பாண்டியா இணை தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். ஒருகட்டத்திற்கு மேல் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் குர்னால் பாண்டியா 36 பந்துகளில் தனது இரண்டாவது ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், மறுபக்கம் விராட் கோலி ஐபிஎல் தொடரில் தனது 61ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.
Also Read: LIVE Cricket Score
இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியை உறுதிசெய்திருந்த நிலையில், விராட் கோலி 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குர்னால் பாண்டியா 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 73 ரன்களையும், டிம் டேவிட் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 19 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18.3 பந்துகளில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி புள்ளிப்பட்டியளிலும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now