எங்கள் அணியின் துருப்புச் சீட்டு மிட்செல் ஸ்டார்க் - கௌதம் கம்பீர்!
பவர் பிளே ஓவர்களிலும் டெத் ஓவர்களிலும் சிறப்பாக பந்து வீசக்கூடிய திறமையை கொண்டிருப்பதால் அவரை இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கியதாக கொல்கத்தா அணியின் ஆலோசகர் மற்றும் முன்னாள் கேப்டன் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
![Bharathi Kannan Bharathi Kannan](https://img.cricketnmore.com/uploads/2021/03/bk.jpg)
![IPL Auction: Starc Will Be Of Massive Help To Our Domestic Bowlers, Says KKR Mentor Gambhir! எங்கள் அணியின் துருப்புச் சீட்டு மிட்செல் ஸ்டார்க் - கௌதம் கம்பீர்!](https://img.cricketnmore.com/uploads/2023/12/ipl-auction-starc-will-be-of-massive-help-to-our-domestic-bowlers-says-kkr-mentor-gambhir1-lg.jpg)
ஐபிஎல் 17ஆவது சீசனுக்காக நடைபெற்று முடிந்த வீரர்கள் ஏலத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து விச்சாளர் மிட்சேல் ஸ்டார்க் 24.75 கோடிகளுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார். இதன் மூலம் 2008 முதல் இதுவரை நடைபெற்ற ஐபிஎல் வரலாற்றின் ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போன வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
சொல்லப்போனால் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பையை கேப்டனாக ஆஸ்திரேலியாவுக்கு வென்று கொடுத்த பட் கமின்ஸ் 20.50 கோடிகளுக்கு ஹைதராபாத் அணிக்காக வாங்கப்பட்டு அதிக தொகைக்கு விலை போன வீரராக சாதனை படைத்தார். அதை அடுத்த ஒரு மணி நேரத்தில் உடைத்த மிட்செல் ஸ்டார்க் தரமானவர் என்றாலும் இவ்வளவு தொகை கொடுத்து கொல்கத்தா வாங்கிய முடிவை நிறைய ரசிகர்கள் வரவேற்கவில்லை.
Trending
ஏனெனில் 2015க்குப்பின் நாட்டுக்காக ஐபிஎல் தொடரை புறக்கணித்து வந்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மகத்தான பவுலராக செயல்பட்டு வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் சமீப காலங்களில் பெரிய அளவில் விளையாடாத அவர் ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்படுவார் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.
இந்நிலையில் பவர் பிளே ஓவர்களிலும் டெத் ஓவர்களிலும் சிறப்பாக பந்து வீசக்கூடிய திறமையை கொண்டிருப்பதால் அவரை இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கியதாக கொல்கத்தா அணியின் ஆலோசகர் மற்றும் முன்னாள் கேப்டன் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “அவர் துருப்புச் சீட்டு வீரர் என்பதில் சந்தேகமில்லை. புதிய பந்திலும் டெத் ஓவர்களிலும் சிறப்பாக பந்து வீசக்கூடிய அவர் எங்களுடைய வேகப்பந்து வீச்சு கூட்டணியை தலைமையேற்று வழி நடத்தும் தன்மையை கொண்டுள்ளார். அவர் எங்கள் அணியில் இருக்கும் இதர இந்திய பவுலர்களுக்கும் மிகப்பெரிய உதவியை செய்வார்.
எனவே எங்களுடைய பவுலிங் அட்டாக்கை தலைமை தாங்கி இதர வீரர்களுக்கும் அவர் உதவி செய்வார். அதற்கு நீங்கள் இந்த பணத்தை கொடுத்தாக வேண்டும். பொதுவாகவே நாங்கள் வலுவான பவுலிங் அட்டாக்கை கொண்டிருப்பதை விரும்புகிறோம். அந்த வகையில் தற்போது முஜீப் உர் ரஹ்மான், காஸ் அட்கின்ஷன், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, சேட்டன் சக்காரியா ஆகியோருடன் மிட்சேல் ஸ்டார்க் உள்ளனர்.
எனவே தற்போது குறிப்பிட்ட மைதானம் அல்லது போட்டி நடைபெறும் சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் களமிறங்குவதற்கு தேவையான பவுலிங் ஆப்சன்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது. என்னைப் பொறுத்த வரை பேட்டிங் வரிசைக்கு நிகராக எங்களுடைய பவுலிங் வரிசை இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now