
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 2ஆவது லீக் போட்டியில் இந்திய அணியின் ஏற்பட்ட பல மாற்றங்கள் தோல்விக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்பட்டது. வழக்கமாக துவக்க வீரர்களாக களமிறங்கும் ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோரது ஜோடி அந்தப் போட்டியில் களமிறக்கப்படவில்லை.
ரோஹித்துக்கு பதிலாக இஷான் கிஷன் துவக்க வீரராகவும், 3வது வீரராக ரோகித் சர்மாவும் களமிறங்கியதே தோல்விக்கு முக்கிய காரணம் என்று ரசிகர்கள் பெருமளவு விமர்சித்தனர். மேலும் இஷான் கிஷன் துவக்க வீரராக களமிறங்கியது ரோஹித்துக்கு உடன்பாடு இல்லை என்றும் சில தகவல்கள் வெளியாகின.
மேலும் மூன்றாவது இடத்தில் ரோஹித் இறங்கியது, இரண்டாவது இன்னிங்சின் போது ரோஹித்தின் ஆலோசனையை ஏற்க மறுத்தது என ரோஹித்-கோலி குறித்து அடுக்கடுக்கான விமர்சனங்கள் இணையத்தில் பரவின. மேலும் ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோர் இடையே மீண்டும் வார்த்தை போர் வெடித்துள்ளதாகவும் சில தகவல்கள் வேகமாக பரவின.