
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 34ஆவது லீக் போட்டியானது இன்று லக்னோ நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியும், நெதர்லாந்து அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து முதலில் விளையாடிய நெதர்லாந்து அணியானது ஆஃப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் மட்டுமே குவித்தது.
ஆஃப்கானிஸ்தான் அணி சார்பாக முகமது நபி 3 விக்கெட்டுகளையும், நூர் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணியானது நெதர்லாந்து அணியின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு 31.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 181 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதோடு இந்த தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி இன்று பெற்ற வெற்றியின் மூலம் தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு சென்றுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து நாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி, “நாங்கள் இன்றைய போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே மிகச்சிறப்பாக செயல்பட்டோம். இந்த தொடரில் மூன்றாவது முறையாக இலக்கினை மிகச் சிறப்பாக சேசிங் செய்து வெற்றி பெற்றுள்ளோம். நாங்கள் சேசிங்கின் போது எதிரணியை பார்த்து அவர்களின் திட்டத்திற்கு ஏற்ப மைதானத்தின் சூழ்நிலை கருத்தில் கொண்டு சேசிங் திட்டங்களை சிறப்பாக வகுத்து வெற்றி கண்டு வருகிறோம்.