
ஐபிஎல் 16ஆவது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான ஏலம் கடந்த 23ஆம் தேதி கொச்சியில் நடந்தது. இந்த ஏலத்தில் ஆல்ரவுண்டர்களுக்கு அதிக கிராக்கி இருந்தது. சமகாலத்தின் சிறந்த ஆல்ரவுண்டர்களுக்காக அணிகள் அடித்துக்கொண்டன.
சாம் கரன் ரூ.18.5 கோடி கொடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்தார் சாம் கரன். ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனை ரூ.17.5 கோடிக்கு வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. பென் ஸ்டோக்ஸை ரூ.16.25கோடிக்கு சிஎஸ்கே அணியும், நிகோலஸ் பூரனை ரூ.16 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹாரி ப்ரூக்கை ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஏலத்தில் எடுத்தன.
ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்களில் அதிர்ச்சிகரமான ஒரு வீரர் சந்தீப் சர்மா. மிதவேகப்பந்துவீச்சாளரான சந்தீப் ஷர்மா அருமையாக ஸ்விங் செய்து வீசக்கூடியவர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இவரும் புவனேஷ்வர் குமாரும் இணைந்து எதிரணிகளின் பேட்டிங் ஆர்டரை சரித்துள்ளனர். புவனேஷ்வர் குமார் - சந்தீப் ஷர்மா இணைந்து விளையாடியபோது சன்ரைசர்ஸ் அணி வலுவான பவுலிங் அணியாக திகழ்ந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் சந்தீப் ஷர்மா ஆடியிருக்கிறார்.