
மும்பையில் நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம் கடந்து அசத்தியதுடன் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 66 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய நாட் ஸ்கைவர் பிரண்ட் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் பெரிதளவில் சோபிக்க தவறினர்.
அதேசமயம், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மரிஸான் கேப், ஜெஸ் ஜோனசன் மற்றும் நல்லபுரெட்டி சரணி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.