-mdl.jpg)
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா மிகச் சிறப்பாக விளையாடி நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்த வெற்றிகளில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 700க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து பேட்டிங் துறையில் எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து முக்கிய பங்காற்றி வருகிறார்.
அதிலும் கொல்கத்தாவில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தம்முடைய பிறந்தநாளில் உலகக்கோப்பை போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்த அவர் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் தன்னுடைய 50ஆவது ஒருநாள் சதத்தை அடித்தார். அதன் வாயிலாக சச்சின் டெண்டுல்கரை முந்திய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்த முதல் வீரர் மற்றும் ஒரு உலகக் கோப்பையில் 700 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனைகளை படைத்தார்.
முன்னதாக ஒரு கட்டத்தில் சச்சின் 49 சதங்களை அடித்த போது அதை யாராலுமே உடைக்க முடியாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் தம்முடைய ஃபிட்னஸ் மற்றும் திறமையால் தற்போது விராட் கோலி தகர்த்தது போல இந்த சாதனையும் கண்டிப்பாக வருங்காலத்தில் யாராவது ஒருவர் உடைப்பார் என்றே சொல்லலாம். அந்த சூழ்நிலையில் சச்சின் சொல்வது போல ஷுப்மன் கில், ஜெய்ஸ்வால் போன்ற ஏதேனும் இந்தியர் விராட் கோலியின் சாதனையை உடைத்தால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.