
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் சைம் அயூப் களமிறங்கினர்.
இதில் அப்துல்லா ஷபீக் 7 ரன்னிலும், அடுத்து வந்த கேப்ட்ன் ஷான் மசூத் 3 ரன்னிலும் வெளியேறினர். இதனையடுத்து சைம் அயூப் உடன் கம்ரான் குலாம் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தனர். இதில் சைம் அயூப் 77 ரன்னிலும், அடுத்து வந்த சவுத் ஷகீல் 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கம்ரான் குலாம் அறிமுக போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.
அதன்பின் 118 ரன்களைச் சேர்த்த நிலையில் காம்ரன் குலாமும் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து இணைந்துள்ள முகமது ரிஸ்வான் மற்றும் ஆகா சல்மான் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டை இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது. இதில் முகமது ரிஸ்வான் 37 ரன்னுடனும், ஆகா சல்மான் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 2 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.