
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் - ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்களைக் குவித்தது.
அந்த அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜார்ஜியா வோல் 17 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 99 ரன்களைக் குவித்து நூலிழையில் சதத்தை தவறவிட்டார். அவரைத் தவிர்த்து கிரண் நவ்கிரே 46 ரன்களையும், கிரேஸ் ஹேரிஸ் 39 ரன்களையும் குவித்தனர். ஆர்சிபி தரப்பில் ஜார்ஜியா வெர்ஹாம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, எல்லிஸ் பெர்ரி போன்ற நட்சத்திர வீராங்கனைகள் சோபிக்க தவறிய நிலையில், அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் 69 ரன்களையும், ஸ்நே ரானா 26 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆர்சிபி அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்களில் ஆல் அவுட்டானது. யுபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன், கேப்டன் தீப்தி சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.