
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 13ஆவது போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் ஹர்டிக் பாண்டியா காய்ச்சல் காரணமாக விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் களமிறங்கினார். ரஷீத் கான் கேப்டனாக செயல்பட்டார். டாஸ் வென்று முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கரின் அதிரடியால் 204 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் விஜய் சங்கர் 24 பந்துகளில் 5 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 63 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
பின்னர், 205 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். தொடக்க வீரர்கள் குர்பாஸ் மற்றும் ஜெகதீசன் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். பின்னர் வந்த வெங்கடேஷ் ஐயர் 83 ரன்னும், கேப்டன் நிதிஷ் ராணா 45 ரன்னும் எடுத்தனர். அதன் பிறகு வந்த ஆண்ட்ரூ ரஸல், சுனில் நரைன் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரை ரஷித் கான் ஹாட்ரிக் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.
இதுவே போட்டிக்கு திரும்பு முனையாக அமைந்தது. குஜராத் வீரர்கள் அனைவருமே வெற்றி நமது பக்கம் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் சூப்பர் மேனாக களத்தில் நின்ற ரிங்கு சிங் கடைசி 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள் விளாசி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவர் 21 பந்துகளில் ஒரு பவுண்டரி, 6 சிக்சர்கள் உள்பட 48 (நாட் அவுட்) ரன்கள் குவித்தார்.