
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது மழை காரணமாக தாமதமானது. இதையடுத்து தலா 16 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் - சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி தொடக்கம் கொடுத்தார். அதன்பின் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சால்ட் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரை ஜஸ்ப்ரித் பும்ரா வீச அதனை எதிர்கொண்ட சுனில் நரைன் பந்துவீட்டு விளையாட நினைத்தார். ஆனால் அந்த பந்தானது கடைசி நொடியில் இன்ஸ்விங்காகி ஸ்டம்புகளை பதம் பார்த்தது. இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுனில் நரைன் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் 7 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த வெங்கடேஷ் ஐயர் - நிதீஷ் ரானா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் வெங்கடேஷ் ஐயர் 42 ரன்களிலும், நிதீஷ் ரானா 33 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆண்ட்ரே ரஸல் 24, ரிங்கு சிங் 20, ரமந்தீப் சிங் 17 ரன்களைச் சேர்க்க கேகேஆர் அணி 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களைச் சேர்த்தது. மும்பை அணி தரப்பில் பியூஷ் சாவ்லா, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.