
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 35ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு அபிஷேக் போரல் மற்றும் கருண் நாயர் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியிலும் அதிரடியாக தொடங்கிய அபிஷேக் போரல் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேஎல் ராகுலும் தனது பங்கிற்கு 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 28 ரன்களையும், மற்றொரு தொடக்க வீரரான கருண் நாயரும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் இணைந்துள்ள கேப்டன் அக்ஸர் படேல் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் கேஎல் ராகுல் ஒரு சிக்ஸரை அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் தன்னுடைய 200ஆவது சிக்ஸரை பூர்த்தி செய்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் 200 சிக்ஸர்களை அடித்த 6ஆவது இந்திய வீரர் எனும் பெருமையை கேஎல் ராகுல் பெற்றுள்ளார்.