
இந்தியா - வங்கதேசம் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என வங்கதேச அணி வென்றது. அதைத்தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. வரும் 14ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள நிலையில், காயம் காரணமாக முதல் போட்டியிலிருந்து கேப்டன் ரோஹித் சர்மா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அபிமன்யூ ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரோஹித் சர்மா முதல் டெஸ்ட்டில் ஆடாததால் கேஎல் ராகுல் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். புஜாரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பந்தை துணை கேப்டனாக நியமிக்காமல் புஜாராவை நியமித்ததை, டுவிட்டரில் ரசிகர்கள் விமர்சித்தது மட்டுமல்லாது பயங்கரமாக கிண்டலும் அடித்தனர்.
இந்நிலையில், அதுகுறித்து விளக்கமளித்த பொறுப்பு கேப்டன் கேஎல் ராகுல், “எதன் அடிப்படையில் இந்த நியமனங்கள் நடக்கின்றன என்று எனக்கு தெரியாது. யாருக்கு எந்த பொறுப்பு கிடைத்தாலும், தனது முதுகில் தானே தட்டிக்கொடுத்துக்கொள்ள வேண்டியதுதான். அனைவருக்கும் அவரவர் பொறுப்பு என்னவென்று தெரியும். ரிஷப் பந்த் மற்றும் புஜாரா ஆகிய இருவருமே சிறந்த பங்களிப்பை செய்திருக்கின்றனர். எனவே இதைப்பற்றியெல்லாம் நாங்கள் அதிகம் யோசிப்பதில்லை. ஒரு அணியாக சிறப்பாக ஆடவேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.