
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. நடந்து முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு மேக ஏலம் நடைபெறவுள்ளது.
இதனால் எந்தெந்தந்த வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள், ஏலத்தில் யாரை வாங்க அணிகள் ஆர்வம் காட்டும் என்ற விவாதங்கள் தொடங்கியுள்ளன.இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அந்தவகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மேற்கொண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பந்த், அடுத்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இருந்து விலகயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி அவரை ஏலத்திற்கு முன்னரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் அணியில் ஒப்பந்தம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் ரிஷப் பந்த் தலைமையின் கீழ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பாக செயல்படாத காரணத்தால் அவரை அணியில் இருந்து நீக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது .