Advertisement

ஐபிஎல் 2023: தோல்விக்கான காரணத்தை விளக்கிய கேஎல் ராகுல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டனான கே.எல் ராகுல், பந்துவீச்சில் சொதப்பியதே தோல்விக்கான முக்கிய காரணம் என வேதனை தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 04, 2023 • 13:20 PM
 KL Rahul Names Key Moment That 'cost Lucknow The Game' Against Chennai!
KL Rahul Names Key Moment That 'cost Lucknow The Game' Against Chennai! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட் (57), கான்வே (47), சிவம் துபே (27) மற்றும் அம்பத்தி ராயூடு (27) ஆகியோர் தங்களத் பங்களிப்பை சரியாக செய்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது.

இதன்பின் 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய லக்னோ அணிக்கு அந்த அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல் ராகுல் மற்றும் கெய்ல் மெயர்ஸ் ஆகியோர் அதிரடி துவக்கம் கொடுத்து முதல் விக்கெட்டிற்கே 6 ஓவர்களுக்குள் 80 ரன்கள் எடுத்து கொடுத்தனர். போட்டியின் 6வது ஓவரில் கே.எல் ராகுலின் விக்கெட்டை எடுத்த மொய்ன் அலி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

Trending


இதன்பின் களத்திற்கு வந்த தீபக் ஹூடாவை (2) மிட்செல் சாட்னரும், க்ரூணல் பாண்டியாவை (9) மொய்ன் அலியும் அடுத்தடுத்து வெளியேற்றி அசத்தினர். இதன்பின் களமிறங்கிய ஸ்டோய்னிஸ் (21), நிக்கோலஸ் பூரண் (32) மற்றும் பதோனி (17) ஆகியோர் தங்களது பங்களிப்பை ஓரளவிற்கு சரியாக செய்து கொடுத்தாலும், மொய்ன் அலி, சாட்னர் ஆகியோர் பெரிதாக ரன் கொடுக்காமல் கச்சிதமாக பந்துவீசியதால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்த லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டனான கே.எல் ராகுல், பந்துவீச்சில் சொதப்பியதே தோல்விக்கான முக்கிய காரணம் என வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து கே.எல் ராகுல் பேசுகையில், “டாஸ் வென்ற போதிலும் எங்களுக்கு துவக்கமே சரியாக அமையாமல் போய்விட்டது. பந்துவீச்சில் நாங்கள் சொதப்பிவிட்டோம், இதுவே தோல்விக்கான முக்கிய காரணம். பந்துவீச்சில் முதல் இரண்டு ஓவர்கள் என்ன செய்வது என்று கூட புரியவில்லை, நாங்கள் சரியான லென்தில் பந்துவீச கூடவில்லை, அதை புரிந்து கொள்ளவே எங்களுக்கு பல ஓவர்கள் தேவைப்பட்டது, அதற்குள் சென்னை அணி 6 ஓவர்களில் 70+ ரன்கள் சேர்த்துவிட்டது. 

ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டீவன் கான்வேவை பாராட்டியே ஆக வேண்டும், அவர்கள் இருவரின் ஆட்டத்தால் தான் எங்கள் மீது அதிக நெருக்கடி ஏற்பட்டது. பேட்டிங்கில் நல்ல துவக்கம் கிடைத்த போதிலும், அதையும் எங்களால் தக்க வைத்து கொள்ள முடியவில்லை. கெய்ல் மெயர்ஸ் நல்ல பார்மில் உள்ளார். டாஸ் வென்றபின் பந்துவீச்சை தேர்வு செய்ததே தோல்விக்கான காரணம் என்று நான் சொல்ல மாட்டேன், கிடைத்த வாய்ப்புகளை நாங்கள் பயன்படுத்தி கொள்ளவில்ல்லை, இதுவே தோல்விக்கான முழு காரணம்” என்று தெரிவித்தார்


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement