
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் அனுபவ வீரர் கேஎல் ராகுல் மற்றும் இளம் வீரர் சர்ஃப்ராஸ் கான் இருவரும் இடம்பிடித்துள்ளனர்.
இதனால் இவர்களில் எந்த வீரர் நம்பர் 5ஆம் இடத்தில் களமிறங்க வாய்ப்பை பெறுவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதில் சர்ஃப்ராஸ் கான் விளையாடும் லெவனில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே தெரிகிறது. இதுகுறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், “அணி எவ்வாறு செயல்படுகிறது என்பதை வெளியில் இருந்து வருபவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள், ஆனால் ராகுல் தனது இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை.
இதற்கு முன் அவருக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாகவே அவர் அணியில் இருந்து விலகி இருந்தார். அதுமட்டுமின்று அவர் தென் ஆப்பிரிக்காவில் சதம் விளாசியதுடன், காயத்திற்கு முன் ஹைதராபாத்தில் 86 ரன்களையும் சேர்த்து சிறப்பான ஃபார்மில் இருந்துள்ளார். அவர் ஃபார்மிற்கு திரும்பியதன் மூலம், ஆஸ்திரேலியாவில் வரவிருக்கும் சவால்களுக்கு நிர்வாகம் அவரை முக்கியமான வீரர்களில் ஒருவராக கருதுகிறது.