
சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 6ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிவென்றது.
இப்போட்டியில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. 150 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்து 6 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜேஸன் ஹோல்டர் பந்துவீச்சில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அட்டமிழந்த விரக்தியில் பெவிலியன் திரும்பிய விராட் கோலி, ஓய்வு அறைக்குச் செல்லும் முன்பாக, பெவிலியனிலிருந்த நாற்காலியை தனது பேட்டால் தள்ளிவிட்டு உள்ளே சென்றார். இந்தக் காட்சி அனைத்தும் கண்காணிப்பு கேமராவிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.
இதையடுத்து, ஐபிஎல் நிர்வாகம் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலியைக் கண்டித்துள்ளது. முதல் முறையாக ஐபிஎல் விதிகளை மீறியதையடுத்து, அவருக்கு கண்டிப்பும், எச்சரிக்கையும் ஐபிஎல் நிர்வாகம் விடுத்துள்ளது.