
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 4 சுற்றின் முக்கிய ஆட்டமானது நேற்று ரிசர்வ் டே நாளில் நடைபெற்று முடிந்தது. கொழும்பு நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 356 ரன்கள் குவித்து அசத்தியது.
பின்னர் 357 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி பாகிஸ்தான் அணியானது துவக்கத்திலிருந்து இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. குறிப்பாக அந்த அணி 100 ரன்களுக்குள்ளே 5 விக்கெட்டுகளை இழந்ததோடு அடுத்த 30 ரன்களுக்குள் மீதமுள்ள அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதியாக பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 8 ஓவர்கள் பந்துவீசி 25 ரன்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.