
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 2024ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏலமானது எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக நவம்பர் 26ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றும் வீரர்களையும், தக்க வைக்கும் வீரர்கள் குறித்த பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்திருந்தது.
அந்த வகையில் 10 ஐபிஎல் அணிகளுமே தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த கேப்டன் ஹார்திக் பாண்டியா மும்பை அணிக்காக டிரேடிங் முறையில் மாற்றப்பட்டுள்ளார். இதன் காரணமாக தற்போது குஜராத் அணி புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அந்த வகையில் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் சார்பில் வெளியான அறிவிப்பில் புதிய கேப்டனாக இளம் வீரர் ஷுப்மன் கில்லை அறிவித்துள்ளது.
முன்னதாக ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி 22 வயதில் பொறுப்பேற்ற நிலையில், குஜராத் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் 24 வயதில் பொறுப்புக்கு வந்துள்ளார். இதனால் ஷுப்மன் கில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவரின் கேப்டன்சி எப்படி இருக்கும், சீனியர் வீரர்களை எப்படி அணுகுவார், அழுத்தத்தை எப்படி சமாளிப்பார் என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.