
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் சதத்தின் மூலம, ஷிவம் தூபேவின் அதிரடியான அரைசதத்தின் மூலமும் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 108 ரன்களையும், ஷிவம் தூபே 66 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடியா லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் குயின்டன் டி காக், கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தாலும், மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கஸ் ஸ்டொய்னிஸ் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்ததுடன் 124 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் விருதுபெற்றபின் பேசிய ஸ்டொய்னிஸ், இந்த தொடரில் என்னைவிட மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுக்கும் சில தொடக்க வீரர்கள் உள்ளனர் என்பதே உண்மை. அனைத்து பந்துகளிலும் ரன் குவிக்க வேண்டும் என்பது எனது திட்டம் இல்லை.