
இலங்கையின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் 5ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் கலே மார்வெல்ஸ் இணை பலப்பரீட்சை நடத்தின. பல்லகலேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் அணியானது பேட்டிங் செய்வதாக அறிவித்து கலே அணியை பந்துவீச அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய ஜாஃப்னா அணியில் குசால் மெண்டிஸ் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த பதும் நிஷங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் 51 ரன்கள் எடுத்திருந்த நிஷங்கா விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரைலீ ரூஸோவ் ஒரு ரன்னிலும், 59 ரன்கள் எடுத்திருந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோவும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த சரித் அசலங்கா 33 ரன்களையும், தனஞ்செயா டி சில்வா 18 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களைச் சேர்த்தது. கலே அணி தரப்பில் ஸஹூர் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.