
இங்கிலாந்து மகளிர் அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும் விளையாடியது. இதில் மூன்று வடிவிலான தொடரிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தென் ஆப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அசத்தியது.
இதையடுத்து இங்கிலாந்து மகளிர் அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அதன்படி நடப்பு மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இவ்விரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் ஜனவரி 12ஆம் தேதி தொடங்கவுள்ளது.
அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜனவரி 20ஆம் தேதியும், டெஸ்ட் தொடரானது ஜனவரி 30ஆம் தேதியும் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டடு. ஹீதர் நைட் தலைமையிலான இந்த அணியில் நாட் ஸ்கைவர்-பிரண்ட், சோஃபி எக்லெஸ்டோன், மையா பௌச்சியர் மற்றும் லாரன் பெல் உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.