
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த கேப்டனாக தற்போது வரை பார்க்கப்படுபவர் மகேந்திர சிங் தோனி. கடந்த 2007ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்து வெளியேறியதை அடுத்து, அடுத்து வந்த டி20 உலகக் கோப்பைக்கு அனுபவமில்லாத இந்திய அணியை வழிநடத்தி கோப்பையைக் கைப்பற்றியது தோனி என்ற ஒரு தனிமனிதனின் சாமார்த்தியம் என்று தான் கூற வேண்டும்.
அதன்பின் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் ஒருநாள் உலக கோப்பை கனவை 2011 ஆம் தனது சிக்சர் மூலம் நிறைவேற்றிக் காட்டினார். தொடர்ந்து 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என ஐசிசி நடத்திய அனைத்து வகையான கோப்பையையும் இந்திய அணிக்கு பெற்றுத்தந்தார். அதுமட்டுமின்றி பல ஆண்டுகள் இந்திய அணிக்காக வெற்றிகரமாக செயல்பட்ட மகேந்திர சிங் தோனி, இந்திய அணியை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றார் என்று கூறலாம்.
ஏனெனில் தோனியின் தலைமையில் ஏகப்பட்ட இளம் வீரர்கள் அணியில் அறிமுகமாகி இன்று உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகின்றனர். அதேபோல் தோனி விட்ட இடத்தை விராட் கோலி சரியாக கைப்பற்றி சிறப்பாக இந்திய அணியை வழி நடத்தி வருகிறார். ஐசிசி நடத்திய கோப்பைகளை விராட் கோலி தலைமையில் இந்திய அணி கைப்பற்றவில்லை என்பதைத் தவிர மற்றபடி இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.