Advertisement

ஒட்டுமொத்த ஆஃப்கானிஸ்தான் நாட்டிற்கும் இது பெருமை - முகமது நபி!

10-12 ஆண்டுகளாக இதுபோன்ற ஒரு பெரிய வெற்றிக்காக தான் நாங்கள் காத்திருந்தோம். பாகிஸ்தான் அணிக்கு எதிராக இத்தனை ஆண்டுகள் கழித்து வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என ஆஃப்கானிஸ்தான் அணியின் அனுபவ வீரரான முகமது நபி கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 24, 2023 • 12:37 PM
ஒட்டுமொத்த ஆஃப்கானிஸ்தான் நாட்டிற்கும் இது பெருமை - முகமது நபி!
ஒட்டுமொத்த ஆஃப்கானிஸ்தான் நாட்டிற்கும் இது பெருமை - முகமது நபி! (Image Source: Google)
Advertisement

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வளர்ந்து வரும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது கடந்த 5-6 ஆண்டுகளில் மிகப்பெரிய எழுச்சியை கண்டுள்ளது என்றால் அது மிகையல்ல. ஏனெனில் கத்துக்குட்டி அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட ஆஃப்கானிஸ்தான் அணி சமீப காலங்களாகவே பெரிய அணிகளுக்கு எதிராக முக்கிய போட்டிகளில் வெற்றி பெற்று வருவது அந்த அணியின் எழுச்சியை வெளிக்காட்டும் விதமாக இருக்கிறது.

அந்த வகையில் ஆசிய கோப்பை தொடரில் சோபிக்க தவறிய ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் சில பெரிய அணிகளை வீழ்த்தி அதிர்ச்சி அளிக்கும் என்று பலராலும் பேசப்பட்டது. அந்த வகையில் இந்த உலகக்கோப்பை தொடர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 5 போட்டிகளில் பங்கேற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணியானது 2 வெற்றிகளை பெற்று அசதியுள்ளது.

Trending


முதல் இரண்டு போட்டிகளில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே தோல்வியை சந்தித்தாலும் அதன் பிறகு நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாறு காணாத வெற்றியை ருசித்தது. அதற்கடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தாலும் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்திய பிறகு அதனை கோலாலமாக கொண்டாடிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் மைதானத்தில் இந்த வெற்றி குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் ஆஃப்கானிஸ்தான் அணியின் அனுபவ வீரரான முகமது நபி இந்த வெற்றி குறித்து கூறுகையில், “இந்த வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய ஒன்று. ஒட்டுமொத்த ஆஃப்கானிஸ்தான் நாட்டிற்கும் இது பெருமை வாய்ந்த தருணமாக மாறியுள்ளது.

ஏனெனில் 10-12 ஆண்டுகளாக இதுபோன்ற ஒரு பெரிய வெற்றிக்காக தான் நாங்கள் காத்திருந்தோம். பாகிஸ்தான் அணிக்கு எதிராக இத்தனை ஆண்டுகள் கழித்து வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. கடைசியாக மூன்று மாதங்கள் நாங்கள் இந்த வெற்றிக்காக நிறையவே உழைத்திருக்கிறோம். அது சரியான நேரத்தில் வந்திருக்கிறது. முதலில் இங்கிலாந்து அணியையும், தற்போது பாகிஸ்தான் அணியையும் பெரிய தொடரில் வீழ்த்தியதில் மிகவும் மகிழ்ச்சி.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நாங்கள் எப்போதுமே தோல்வியை சந்தித்திருந்தாலும் இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த வகையில் எங்களது அணியின் வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களுக்கு வெற்றியை தேடித் தந்துள்ளனர். தற்போது நாங்கள் புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் பாதி வழியில் இருக்கிறோம். நிச்சயம் அடுத்ததாக இன்னும் சில போட்டிகளிலும் வெற்றி பெற்று முன்னேற்றத்தைக் காண விரும்புகிறோம்” என கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement