
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. டெல்லி அணிக்கு இன்னிங்ஸின் தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரரான சால்ட், ஷமி வீசிய போட்டியின் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இரண்டாவது ஓவரில் எதிர்பாராத விதமாக கேப்டன் வார்னர் ரன் அவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த ரோஸோ 8 ரன்களிலும், மணீஷ் பாண்டே ஒரு ரன்னிலும், பிரியம் கார்க் 10 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், 23 ரன்களை சேர்ப்பதற்குள் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த சரிவிலிருந்து டெல்லி அணியால் இறுதிவரை மீளவே முடியவில்லை.
இருப்பினும் 6வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த டெல்லி துணை கேப்டன் அக்ஷர் படேல் மற்றும் அமன் கான் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக விளையாடிய இந்த கூட்டணி 55 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து, 27 ரன்கள் சேர்த்து இருந்தபோது அக்ஷர் படேல் ஆட்டமிழந்தார். அதேநேரம் பொறுப்புடன் விளையாடிய அமன் கான், 41 பந்துகளில் அரைசதம் எட்டினார். தொடர்ந்து 51 ரன்கள் சேர்த்து இருந்தபோது அவர் ஆட்டமிழந்தார்.