
17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் இன்னிங்ஸின் ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மா அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரியும், சிக்சர்களையும் விளாச முதல் 6 ஓவர்களில் மும்பை அணி 75 ரன்களைக் குவித்தது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் சர்மா தனது அரை சதத்தைப் பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 49 ரன்கள் சேர்த்த நிலையில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.
அவரைத்தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் இரண்டு பந்துகளை எதிர்கொண்ட நிலையில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அவர்களைத் தொடர்ந்து அரைசதத்தை நெருங்கிக் கொண்டிருந்த இஷான் கிஷான் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 42 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய திலக் வர்மாவும் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.