
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசனில் இன்று நடைபெறும் 22ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாட உள்ளது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் 2 போட்டிகளில் பெங்களூரு மற்றும் சென்னை அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. இதனால் மும்பை அணி மீதான அழுத்தம் அதிகரிக்க, பின்னர் டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கியது.
மும்பை அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டுமே பலவீனமாக உள்ள நிலையில், வலிமையான கேகேஆர் அணியை எப்படி எதிர்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதனிடையே இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது ஜெர்சியை மாற்ற களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை அணி உரிமையாளர் நீட்டா அம்பானியின் இஎஸ்ஏ (Education and Sports For All) என்ற அமைப்பின் முன்னெடுப்பிற்காக, மும்பை அணி வீரர்கள் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை வீராங்கனைகள் அணிந்த ஜெர்சியோடு களமிறங்க உள்ளனர்.
விளையாட்டில் பெண்கள் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், அதிகரிக்கவும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முன்னெடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் இன்றையப் போட்டியில் 19 ஆயிரம் பெண்கள் வான்கடே மைதானத்தில் ஐபிஎல் போட்டியை நேரில் கண்டு ரசிக்க உள்ளனர். அதுமட்டுமல்லாமல் மும்பை அணியின் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், பயிற்சியாளர் ஜுலன் கோஸ்வாமி மற்றும் வீராங்கனைகள் அனைவரும் போட்டியை நேரில் காண உள்ளனர்.