
இந்தியாவில் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. மொத்தம் 15 லீக் போட்டிகள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் போட்டி போட்டு எதிரணியுடன் மல்லுக்கட்டி வருகின்றன. அந்தவகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நடப்பு சீசனில் இதுவரை தோல்வியையே சந்திகாத அணிகளாக வலம்வருகின்றனர்.
அதேவகையில் ஐபிஎல் தொடரில் மிகவும் பலம் பொருந்திய அணியாக பார்க்கப்பட்டுவரும் மும்பை இந்தியன்ஸ் அணியானது நடப்பு சீசனில் இதுவரை ஒருவெற்றியைக் கூட பதிவுசெய்ய முடியாமல் ஹாட்ரிக் தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளை குவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் நடப்பு சீசனை எதிர்கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளைப் பெற்ற நிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு சருக்கியுள்ளது. இருப்பினும் இனிவரும் போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றி பாதைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.