
ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஏப்ரல் 28ஆம் தேதி சிட்டாகாங்கில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் வங்கதேச அணி தோல்வியைத் தழுவினாலோ அல்லது போட்டியை டிரா செய்தாலோ தொடரை இழக்கும் என்பதால் அந்த அணி கூடுதல் கவனத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், சில்ஹெட்டில் நடந்த முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் முஷ்ஃபிக்கூர் ரஹீமுக்கு அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். முன்னாதாக முதல் டெஸ்டில் முஷ்ஃபிக்கூர் ரஹீம் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தமாகவே 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அணியின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.