
ஐசிசி நடத்தும் 9ஆவது ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள நெதர்லாந்து மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. டல்லாஸில் நடைபெற இருந்த இப்போட்டியின் டாஸானது மழை காரணமாக தாமதமானது. அதன்பின் இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நேபாள் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய நேபாள் அணிக்கு குஷால் புர்டெல் மற்றும் ஆசிஃப் சேக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆசிஃப் சேக் 4 ரன்களுக்கும், குஷால் புர்டெல் 7 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய அனில் ஷாவும் 11 ரன்களோடு நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ரோஹித் பௌடல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய குஷால் மல்லா, தீபேந்திர சிங் ஐரி, சோம்பால் காமி ஆகிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
ஆனாலும் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரோஹித் பௌடல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரிகளுடன் 35 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் நேபாள் அணி 84 ரன்களிலேயே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த குல்ஷன் ஜா மற்றும் கரண் கேசி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய கரண் கேசி இரண்டு சிக்ஸர்களுடன் 17 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.